Published : 07 Oct 2021 03:51 PM
Last Updated : 07 Oct 2021 03:51 PM

சட்டப்பேரவை உறுப்பினராக மம்தா பானர்ஜி  பதவியேற்பு

கொல்கத்தா

பவானிபூர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும்.

இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டார். செப்.30-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் 25,680 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதுபோலவே மற்ற இரு தொகுதி இடைத்தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அம்ருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்தநிலையில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கான மம்தா, பானர்ஜி, அம்ருல் இஸ்லாம், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மேற்குவங்க சட்டப்பேரவை அலுவலகத்தில் அவர்கள் 3 பேரும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x