Published : 07 Oct 2021 03:18 PM
Last Updated : 07 Oct 2021 03:18 PM

பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து வருண் காந்தி, மேனகா காந்தி நீக்கம்

பாஜக எம்.பி. வருண் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, அவரின் மகனும், எம்.பி.யுமான வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் இருவரின் பெயரும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்து வருண் காந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, நிர்வாகக் குழுவில் இருந்து வருண் காந்தி நீக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் மிஸ்ரா, துணை முதல்வருக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, மூத்த தலைவர்கள், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

80 பேர் வழக்கமான உறுப்பினர்களாகவும், 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 179 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும் உள்ளனர். 80 உறுப்பினர்களில் 37 பேர் மத்திய அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி. தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையடுத்து, நிர்வாகக் குழுவில் மத்திய அமைச்சர் பி.எல்.வர்மா மற்றும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 80 உறுப்பினர்களில் 12 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களில் 6 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லை. அதேசமயம், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் தொடர்ந்து தேசிய நிர்வாகக் குழுவில் உள்ளனர். நவம்பர் 7-ம் தேதி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x