Last Updated : 07 Oct, 2021 02:12 PM

 

Published : 07 Oct 2021 02:12 PM
Last Updated : 07 Oct 2021 02:12 PM

லக்கிம்பூர் வன்முறையில் எத்தனை பேர் கைது ?- நாளை அறிக்கை தாக்கல் உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவு

படம் | ஏஎன்ஐ

புதுடெல்லி

லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாளைக்குள் உத்தரப்பிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவி்ட்டுள்ளது.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராடினர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இன்று விசாரிப்பதாக தகவல் வெளியானது.

இதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக தவறானத் தகவல் பரவியுள்ளது.

ஆனால், இந்த வழக்கு வழக்கறிஞர்கள் இருவர் கடிதத்தின் அடிப்படையில்தான் பொதுநலன் வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. பொதுநலன் வழக்காக இல்லாமல் கூட விசாரிப்போம். எங்களுக்கு கடிதம் எழுதிய இருவழக்கறிஞர்கள் சிவ குமார் திரிபாதி, சிஎஸ் பாண்டா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்” என்று தெரிவித்தனர்.

நீதிபதிகள் அமர்வு, உ.பி. அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் “ லக்கிம்பூர் கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும். 8 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டம்தான். உயிரிழந்த 8 பேரும் யார், அவர்கள் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். யார் மீதெல்லாம் முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் தெரிவியுங்கள்” எனத் தெரிவித்தனர்.

அதற்கு உ.பி. அரசு வழக்கறிஞர் பதில் அளிக்கையில் “ லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைைமயில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு “ எங்களுக்கு வந்த புகாரே விசாரணை முறையாக நடக்காது, முறையாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றுதானே வந்துள்ளது. இந்த விசாரணையின் போது எங்களுக்குக் கிடைத்த தகவலில், உயிரிழந்த விவசாயின் தாயார் மகனின் இறப்புச் செய்தில் மோசமான உடல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அறிகிறோம். அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உ.பி. அரசுக்கு உத்தரவிடுகிறோம் ” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x