Published : 06 Oct 2021 10:11 AM
Last Updated : 06 Oct 2021 10:11 AM

மருத்துவக் கல்வியும், மருத்துவத் தொழிலும் வியாபாரமாகிவிட்டது இந்த தேசத்தின் சோகம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடெல்லி

இந்த தேசத்தின் சோகம் மருத்துவக் கல்வி வியாபாரமாகியிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வுக்கான (நீட்-எஸ்எஸ்) அறிவிக்கை கடந்த ஜூலை 23-ம் தேதி வெளியிடப்பட்டு நீட் தேர்வுகள் நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவிக்கைக்கு முன் திடீரென பாடத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் திருத்தங்களுக்கு முதுநிலை மருத்துவம் பயிலும் 41 மாணவர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது கடைசி நேரத்தில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்த மத்திய அரசையும், தேசிய கல்வி வாரியத்தையும் நீதிபதிகள் கடுமையாகக் கடிந்துகொண்டு அதிருப்தி தெரிவித்தனர். மத்திய அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டியா ஆஜரானார்.

அப்போது நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ''கடைசி நேரத்தில் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காகவா திருத்தம் செய்யப்பட்டது?

இந்த தேசத்தின் சோகம் மருத்துவத் தொழிலும், மருத்துவக் கல்வியும் வியாபாரமாகிவிட்டது. மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதும் வியாபாரமாகிவிட்டது என்ற வலுவான கருத்து எங்களுக்கு இருக்கிறது.
திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் பெரும்பாலும் பொது மருத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபீடர் கேட்டகரி எங்கே?

முன்பு 60 சதவீதக் கேள்விகள் மாணவர்கள் தேர்வு செய்த பாடத்திலிருந்தும் மற்றவை பிறபகுதியில் இருந்தும் கேட்கப்படும். திடீரென பாடத்திட்டங்கள் திருத்தம் செய்ய வேண்டிய காரணம் என்ன, பொது மருத்துவத்துக்கு முக்கியத்துவம் ஏன்?'' எனக் கேட்டார்.

மேலும், நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் 100 சதவீதம் கேள்விகள் பொது மருத்துவத்தில் இருந்து வருகின்றன. ஒட்டுமொத்தத் தேர்வும் பொது மருத்துவத்தில் இருந்து வருகிறது.

அப்படியென்றால் பொது மருத்துவம் படித்தவர்களை அதிகம் காலியான இடங்களில் நிரப்பும் திட்டமா. முதலீடு செய்த தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சமநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என அரசு நினைக்கிறது.

ஆனால், அதேசமயம், மருத்துவத் தொழிலையும், மாணவர்கள் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உணர்ச்சியற்ற அதிகாரிகளின் கருணைக்காக இளம் மருத்துவர்களை விட்டுவிட முடியாது. இளம் மருத்துவர்களைக் கால்பந்துபோல் அடித்து விளையாடவும் முடியாது.

திருத்தப்பட்ட பாடத்திட்டங்களால் தனியார் மருத்துவக் கல்லூரிகள்தான் பயன்பெறும். அரசுக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்காகப் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. மாணவர்களின் நலனைவிட, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நலன்தான் அரசுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. நாளை உங்களுக்கு அவகாசம் அளிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x