

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் ஜி.எம்.ஆர். சர்வதேச விமான நிலையத்தில் விஜய் மல்லையா அளித்த ரூ.50 லட்சத்துக்கான காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதுதொடர் பாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் ஹைதராபாத் நீதிமன்றத் தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 14-வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஜி.எஸ்.ரமேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை நிதித்துறை அதிகாரி ரகுநாத் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டை மாஜிஸ்திரேட் பிறப்பித்தார். இருவரையும் வரும் ஏப்ரல் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இந்தியாவுக்கு திரும்பமாட்டேன்
பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையா அளித்துள்ள பேட்டி: இப்போதைக்கு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை.
நான் பிறப்பால் இந்தியன். எனது தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்வதையே விரும்புகிறேன். ஆனால் இந்தியா செல்வதற்கு இப்போது உகந்த நேரம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.