Published : 04 Oct 2021 06:08 PM
Last Updated : 04 Oct 2021 06:08 PM

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு: அக். 7 வரை போலீஸ் காவல் 

போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க என்சிபிக்கு மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவை விசாரித்த நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போதைப் பொருளை வாங்கியவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினால் தான் அதனை விற்பவர்களைப் பற்றிய விவரங்களை அறிய முடியும் என்று வாதிக்கப்பட்டது. மேலும், இந்த விசாரணை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், விசாரணை முகமை என இருவருக்குமே நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சொகுசுக் கப்பலில் கேளிக்கை:

முன்னதாக, மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர். அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

தற்போது ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x