Published : 03 Oct 2021 03:37 PM
Last Updated : 03 Oct 2021 03:37 PM

பவானிபூரில் மம்தா பானர்ஜி பெரும் வெற்றி: பாஜக படுதோல்வி

கொல்கத்தா

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலைவிட 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது.

இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

செப்.30-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று அங்கு, வாக்கு எண்ணிக்கை நடந்தது.அங்கு 14 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 82,068 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் 25,680 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2896 வாக்குகள் மட்டுமே பெற்றது

2011-ம் ஆண்டு தேர்தலில் பவானிபூரில் 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x