Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

அக்.7 வரை பாஜக தொண்டர்கள் காதி பொருட்கள் வாங்குவார்கள்: தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தகவல்

புதுடெல்லி

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி நேற்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா டெல்லியில் உள்ள காதி கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: மகாத்மா காந்தியின் கனவுகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நனவாக்கி வருகிறது. கிராம ஸ்வராஜ்ஜியம் அமைப்பதே எனது நோக்கம் என்று காந்தி முழங்கினார். அவரது கொள்கைகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அரசு மும்முரமாக உள்ளது. நாட்டை தற்சார்பு அடையச் செய்தல், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை மகாத்மா காந்தியின் கனவாகும்.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு காதிப் பொருட்களின் விற்பனை தற்போது 188 சதவீதமாக உயர்ந்துள்ளது. காதிப் பொருட்களைப் பயன்படுத்துவ தால் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் 7-ம் தேதி வரை நாடு முழுவதிலும் உள்ள காதி கடைகளுக்கு பாஜக தொண்டர்கள் சென்று காதிப் பொருட்களை வாங்குவர்.

காதிப் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தைபாஜக தொண்டர்கள் நடத்தவுள்ளனர். காதிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் கிராம ஸ்வராஜ்ஜியம் வலுவடைந்து நாடு தற்சார்புடையதாக மாறும்.

இவ்வாறு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x