Published : 21 Mar 2016 10:48 AM
Last Updated : 21 Mar 2016 10:48 AM
பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்பவர்தான் தேசப்பற்று மிக்கவர் என்பதை எப்படி நிரூபிக்க முடியும் என பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்தில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தியாதுல் முஸ்லி மின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழங்கமாட்டேன் என கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மகாராஷ்டிர சட்டப் பேரவையில் அக்கட்சியின் எம்எல்ஏவான வாரிஸ் பதானும் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழங்கு வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் இருந்து அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ‘‘நாட்டுக்கு எதிரான விமர்சனங் களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பேச்சுரிமை என்ற பெயரில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பக் கூடாது’’ என்று தெரிவித்திருந்தார்.
இதனால் நாடு முழுவதும் பாரத மாதா முழக்கம் தொடர்பான விவாதம் வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ‘ட்விட்டரில்’ காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி நேற்று கூறும்போது, ‘‘சுதந்திர போராட்டத் தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ‘ஜெய் ஹிந்த்’ என்றும் பகத் சிங் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ ‘இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்றும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்ற முழக்கத்தை தவிர வேறு முழக்கம் எழுப்புபவர்கள் அனைவருமே தேசத்துக்கு எதிரானவர்கள் என பாஜக கூறுவதில் என்ன நியாயம் உள்ளது. பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்பவர் தேசப்பற்று மிக்கவர் தான் என எப்படி நிரூபிக்க முடியும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT