Last Updated : 01 Oct, 2021 03:34 PM

 

Published : 01 Oct 2021 03:34 PM
Last Updated : 01 Oct 2021 03:34 PM

தலையில்லாத உடல் எதற்கு? ராகுலைத் தடுக்க காங்.மூத்த தலைவர் பாஜவுடன் கூட்டு; சிவசேனா எச்சரிக்கை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. | கோப்புப்படம்

மும்பை

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் அவசியம் தேவை. தலைமையில் ஏற்பட்ட குழப்பம்தான் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். முழு நேரத் தலைவர் கோரி மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதிலிருந்து கட்சிக்குள் குழப்பம் அதிகரித்துள்ளது. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தும் குழுவை சோனியா காந்தி அறிவித்தும் இன்னும் தேர்தல் நடக்கவில்லை.

இதற்கிடையே பஞ்சாப்பில் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், மாநிலத் தலைவர் சித்து இடையே ஏற்பட்ட அதிகார மோதல் மாநிலத்தின் ஸ்திரத் தன்மையையே குலைத்துவிட்டது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பஞ்சாப் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த மோதல் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் காங்கிரஸ் கட்சியின் குழப்பம், தலைவர் பதவி குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் அவசியம். தலையில்லாமல் உடல் மட்டும் இருந்து என்ன பயன். காங்கிரஸ் கட்சி வலியால் துடிக்கிறது. சிகிச்சை தேவை. இந்த சிகிச்சை சரியானதா தேவையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

காங்கிரஸ் கட்சியில் உள்ள ஓட்டைகளை அடைக்க ராகுல் காந்தி முயன்று வருகிறார். ஆனால், புதிய தலைவர்கள், இளம் தலைவர்கள் பணியாற்ற விடாமல் கட்சிக்குள் இருக்கும் சில மூத்த நில பிரபுக்கள் தடுக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு விஷயங்களுக்கு அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இதில் கட்சியின் மூத்த பாதுகாவலர் ஒருவர், பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் வைத்துள்ளது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை மூழ்கடிக்க முயல்கிறார்கள்.

படைத் தளபதி யாருமில்லையென்றால், எவ்வாறு கட்சி போராடும். சில நல்ல எண்ணம் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், முழு நேரத் தலைவர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதில் தவறில்லை. தலைவர் பதவி குறித்த கேள்விக்கு பதில் சோனியா காந்தி குடும்பம்தான்.

ஆனால், யார் தலைவர் என்பதுதான் கேள்வி. தலைவர் பதவி குறித்த சந்தேகம், குழப்பத்தை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராகத் தேர்வு செய்து ராகுல் காந்தி துணிச்சலாக முடிவு எடுத்தார். ஆனால், சித்து அவருக்குப் பிரச்சினைகளை உருவாக்கினார். கட்சியில் சமீபத்தில் சேர்ந்த சித்து மீது அவ்வளவு நம்பிக்கையை ராகுல் காந்தி வைக்க வேண்டியதில்லை.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், கோவா முன்னாள் முதல்வர் லூயிஜின்ஹோ பெலாரியோ இருவரும் சிறிதுகூட சொரணை இல்லாமல் நடக்கிறார்கள். இருவருக்கும் உயர் பதவியை காங்கிரஸ் கட்சி கொடுத்தது. ஆனால், கட்சியை விட்டு இருவரும் விலக நினைக்கிறார்கள். ஜிதன் பிரசாதாவுக்கு மத்திய அமைச்சர் பதவி காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜகவில் இணைந்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சி நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. தற்போது பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபின், பிரதமராக மோடி வந்தபின்புதான் காங்கிரஸ் கட்சி அதிகமாகப் பிரச்சினைகளைச் சந்திக்கிறது''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x