ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு இப்போது நகருக்குள் வந்து போராட்டமா?- விவசாயிகள் அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, இப்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என்று விவசாயிகள் சங்க அமைப்பினர் மீது உச்ச நீதிமன்றம் கடும் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து கடந்த ஓராண்டாகப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் ஓராண்டு நினைவாகக் கடந்த மாதத்தில் பாரத் பந்த்தை விவசாயிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் 200 விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப் போகிறோம் என்றும், அதற்கு அனுமதி வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும், விவசாயிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் அமைப்பான கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் அமர்வு விவசாயிகள் நடத்த இருக்கும் சத்தியாகிரகப் போராட்டத்தையும், அதற்கு அனுமதி கேட்டதையும் கடுமையாகச் சாடினர்.

நீதிபதிகள் அமர்வு மனுதாரர் வழக்கறிஞரிடம் கூறுகையில், “ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தையும் நெரிக்கிறீர்கள். இப்போது, நகரின் மையப்பகுதிக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்களா. சமநிலையான அணுகுமுறை அனைத்திலும் தேவை.

ஒரு விஷயத்தை எங்களிடம் சொல்லுங்கள், நீங்கள் சத்தியாகிரகம் செய்யப் போகிறீர்கள். எந்த பிரச்சினையும் இல்லை. , நீங்கள் ஒரு விஷயத்தில் நீதிமன்றத்தை அணுகிவிட்டால், நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்து, அதை விட்டுவிட வேண்டும். நீதிமன்றம் முறையாக முடிவு எடுக்கும். முதலில் வேளாண் சட்டங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டீர்கள் பின்னர், அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தையும் அணுகினீர்கள்.

இப்போது சத்தியாகிரகத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்?. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் உங்கள் வாதம். இது தொடர்பாக ரிட் மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டால் அதன்பின் போராட்டம் நடத்துவோம் என்று நீங்கள் கூற முடியாது. அப்படியென்றால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதற்கு?

அப்படியென்றால் நீங்கள் போராட்டம் நடத்துவது நீதித்துறை செயல்பாட்டுக்கு எதிராகத்தான் என்று எடுக்கலாமா” எனக் கேட்டனர்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர்கள், அவ்வாறு கிடையாது என்று தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு, “அப்படியென்றால், நீதித்துறையை அணுகிவிட்டால், நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை வையுங்கள்.

போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதேசமயம், மக்கள் சுதந்திரமாக அச்சமின்றி ஓர் இடம் விட்டு ஓர் இடம் செல்லவும் உரிமை இருக்கிறது. ஆனால், போராட்டத்தில் மக்களின் உடமைகள் சேதப்படுத்தப்படுகின்றன.

நீங்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தும் இடத்தில் வசிக்கும் மக்களிடம் போராட்டத்துக்கு அனுமதி கேட்டீர்களா. உங்கள் போராட்டத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா” எனக் கேட்டனர்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் பதில் அளிக்கையில், “விவசாயிகள் அமைதியாக சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு, “அமைதியான போராட்டம் என்றால் என்ன. ரயில்களை மறிப்பது, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைத் தடை செய்வது என்று அர்த்தமா. அமைதியான போராட்டத்தில் மக்களுக்கு இடையூறு வராது என்று கூறுகிறீர்களா” எனத் தெரிவித்தார்

அதற்து மனுதாரர் வழக்கறிஞர் பதில் அளிக்கையில், “நெடுஞ்சாலைகளை விவசாயிகள் மறிக்கவில்லை, போலீஸார் மறித்தனர்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “விவசாயிகள் அமைப்பு, நீதிமன்றத்துக்கு வந்து, போராட்டம் நடத்தினோம், நெடுஞ்சாலைகளைத் தடை செய்தோம், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனத் தெரிவிததுள்ளார்கள். ஆனால், நீங்கள் நெஞ்சாலைகளை மறிக்கவில்லை என்று கூறுகிறீர்கள்.

அந்தப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்கவில்லையா. அப்படியென்றால், அதை பிரமாணப் பத்திரத்தில் தெரியப்படுத்துங்கள். அதைக் குறித்துக்கொள்கிறோம். வழக்கை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த வழக்கின் மனுவின் நகலை மத்திய அரசுக்கும், அட்டர்னி ஜெனரலுக்கும் அனுப்பிவையுங்கள்” எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in