Last Updated : 01 Oct, 2021 02:14 PM

 

Published : 01 Oct 2021 02:14 PM
Last Updated : 01 Oct 2021 02:14 PM

தொடர்ந்து 3-வது மாதம்: செப்டம்பரிலும் ஜிஎஸ்டி வரிவசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் | கோப்புப்படம்

புதுடெல்லி

தொடர்ந்து 3-வது மாதமாகக் கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்ததுள்ளது. நிதியாண்டின் 2-ம் பகுதியில் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2021, செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 10 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.95 ஆயிரத்து 480 கோடியாக இருந்த நிலையில் அதைவிட 23 சதவீதம் கூடுதலாகவும், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட 17 சதவீதமும் கூடுதலாக இந்த ஆண்டு வரி வசூலாகியுள்ளது. 2019-ம் ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி ரூ.91,916 கோடி வசூலாகியது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் செப்டம்பர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16 லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும் வசூலாகியது.

செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 10 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.20 ஆயிரத்து 578 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.26 ஆயிரத்து 767 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.60 ஆயிரத்து 911 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.8 ஆயிரத்து 754 கோடி கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி உள்நாட்டுப் பரிமாற்றங்கள் மூலம் கூடுதலாக 30 சதவீதமும், கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 20 சதவீதம் கூடுதலாகவும் வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முதல் காலாண்டில் சராசரியாக ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. முதல் காலாண்டைவிட 2-வது காலாண்டில் சராசரி வருவாய் 5 சதவீதம் அதிகரித்துள்ளது''.

இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x