

காங்கிரஸ் கட்சியில் இருந்து விரைவில் விலகப் போவதாக அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அதற்கு முன்னோட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தின் சுய விவரக்குறிப்பில் காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.
இதனிடையே கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் நேற்று டெல்லி சென்றார்.
டெல்லியில் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர் சிங் இன்று காலை சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அவர் பஞ்சாப் எல்லை பாதுகாப்பு குறித்து விவாதித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அமரீந்தர் சிங் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் "இதுவரை நான் காங்கிரஸில் இருக்கிறேன் ஆனால் நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். நான் ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரக்குறிப்பு பகுதியில் காங்கிரஸை என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.
அவரது தற்போதைய ட்விட்டர் சுயவிவரக் குறிப்பில் அமரீந்தர் சிங் ஒரு ராணுவ வீரர், பஞ்சாப் முன்னாள் முதல்வர், மாநிலத்திற்கு தொடர்ந்து சேவை செய்பவர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி என்ற தனது அடையாளத்தை நீக்கியுள்ளார்.