

மும்பையில் ஒரே மருத்துவக்கல்லூரியில் பயிலும் எம்பிபிஎஸ் மாணவர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் முதல் அலையைவிட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட 2-வது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர்.
ஆனால், தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தபின் தற்போது கரோனா தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், குறிப்பாக சமூக விலகல், தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்களும், மத்திய அரசும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலையை எதிர்பார்க்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
நாடுமுழுவதும் கரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஒரு கல்வி நிறுவனங்களில் மாணவ – மாணவியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் ஒரே மருத்துவக் கல்லூரியில் பயிலும் எம்பிபிஎஸ் மாணவர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியதாவது:
மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவக்கல்லூரியில் 23 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 23 மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றபோது இது பரவியிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.