முஸ்லிம் நண்பர்களுடன் பயணித்த மருத்துவ மாணவர்கள் மீது தாக்குதல்: மங்களூருவில் பஜ்ரங்தளம் அமைப்பினர் 5 பேர் கைது

முஸ்லிம் நண்பர்களுடன் பயணித்த மருத்துவ மாணவர்கள் மீது தாக்குதல்: மங்களூருவில் பஜ்ரங்தளம் அமைப்பினர் 5 பேர் கைது
Updated on
1 min read

முஸ்லிம் நண்பர்களுடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களை தாக்கிய பஜ்ரங்தளம் அமைப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மல்பே கடற்கரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது வழிமறித்த பஜ்ரங்தளம் அமைப்பினர் காரில் உள்ள மாணவர்களின் பெயரைக் கேட்டு சோதனை நடத்தினர்.

அப்போது காரில் 2 முஸ்லிம் மாணவர்கள் இருந்ததால், ' இந்துக்கள் ஆகிய நீங்கள் அவர்களுடன் ஏன் சேர்கிறீர்கள்?' என இந்து மாணவர்களை தாக்கினர்.

இந்த சம்பவத்தை பஜ்ரங்தளம் அமைப்பினர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் என்.சசிகுமார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மங்களூரு நகர காவல்நிலைய போலீஸார் பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்த பீரித்தம் ஷெட்டி, ராகேஷ், அபிஷேக் உள்ளிட்ட 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 341,323,504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்களை நேற்று கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in