Last Updated : 29 Sep, 2021 09:53 AM

 

Published : 29 Sep 2021 09:53 AM
Last Updated : 29 Sep 2021 09:53 AM

இந்தியாவில் குறையும் அன்றாட கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேருக்கு தொற்று உறுதி, 378 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட தொற்று பாதிப்பு 20,000க்கும் கீழ் குறைந்துவருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அதிகபட்சமாக கேரளாவில் 11,196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 28,178 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை பதிவான மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 3,37,16,451
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை: 3,29,86,180
நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை: 4,47,751
நாடு முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 2,82,520

இதுவரை நாடு முழுவதும் 87,66,63,490 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54,13,332 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசியபோது, அனைத்து மக்களும் கரோனா தடுப்பூசி பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியேறவில்லை என்பதை உறுதி செய்து, அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

அக்டோபர், நவம்பர் மாதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x