Published : 28 Sep 2021 07:07 PM
Last Updated : 28 Sep 2021 07:07 PM

காங்கிரஸில் இணைந்தார் கன்னையா குமார்: ஜிக்னேஷ் மேவானி ஆதரவு

புதுடெல்லி

கன்னையா குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இன்று காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவருமான கன்னையா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்து வந்தார். இதனால் விரைவில் காங்கிரஸில் இணைவார் எனக்கூறப்பட்டது.

அதுபோலவே குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். இது தொடர்பாகவும் மேவானியுடன் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பேசி வந்தது சமூகமான முடிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. கன்னையா குமார் மற்றும் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைய முடிவு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் இளம் தலைவர்கள் ஜிதன்பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ் போன்றோர் வெளியேறிவிட்டனர்.

இதனால், பிரச்சாரத்துக்கு வலுவான இளம் தலைவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடியவர்கள் தேவை என்பதால், கன்னையா குமாருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் கட்சியில் இளம் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் வழங்க ராகுல் காந்தி விரும்புகிறார் அதன் காரணமாகவே கன்னையா குமார் இணைவு இருக்கலாம் என தகவல் வெளியானது.

இந்தநிலையில் கன்னையா குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.

அதேசமயம் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இன்று காங்கிரஸில் இணையவில்லை. அவர் கட்சிக்கு ஆதரவு மட்டுமே தெரிவித்தார். அவர் தற்போது எம்எல்ஏ என்பதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தால் இடையூறு வரலாம் என்பதால் அவர் அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணையவில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x