Published : 28 Sep 2021 11:54 AM
Last Updated : 28 Sep 2021 11:54 AM

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் ஒத்திவைக்க கோரிய மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும்,வேளாண்அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்தமனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன் திட்டமிட்டபடி வரும் 30ம்- தேதி பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x