

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக பொதுப் பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சந்தீப் சக்சேனா பேசும் போது, ‘‘கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை நிலுவையில் உள்ள 30.6 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தர விட்டது. ஆனால், கர்நாடகா முறைப்படி தண்ணீரை வழங்க வில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மட்டுமல்ல, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் அவமதிக்கும் செயல்.
தமிழகத்துக்கு 37.3 டிஎம்சி நீரை கர்நாடகா இன்னும் வழங்க வேண்டியுள்ளது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் நிலுவை யில் உள்ள நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். அதேபோல அக்டோபரில் வழங்க வேண்டிய 20 டிஎம்சி நீரையும் முறையாக வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் கர்நாடக அரசு உடனடியாக நீரை திறக்க உத்தரவிட வேண்டும்'' என வலி யுறுத்தினார்.
கர்நாடக அரசு தரப்பில், ‘‘கர்நாடகாவில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்த அளவில் மழை பெய்துள்ளதால் கிருஷ்ண ராஜசாகர் அணை முழு கொள் ளளவை எட்டவில்லை. எனினும் தமிழகத்துக்கு முறையாக நீர் திறக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 37.3 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க வேண்டும். நான்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மேகேதாட்டு திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றை பற்றி விவாதிக்க முடியும்’’ என்றார்.