ம.பி. மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு

ம.பி. மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை போபாலில் அவர் பெற்றுக் கொண்டார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல்.முருகன். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத மத்திய அமைச்சர்கள் அனைவரும், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்று விதி உள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் கடந்த 23-ம் தேதி அன்று பரிசீலனை செய்யப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று இறுதி நாளாகும். அரசியல் கட்சியினர் யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் பாஜக சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போபால் சென்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எல்.முருகன் பெற்றுக் கொண்டார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in