Published : 27 Sep 2021 02:19 PM
Last Updated : 27 Sep 2021 02:19 PM

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் புரட்சிகர மாற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

இலவச கரோனா தடுப்பூசி இயக்கத்தின் மூலம், இந்தியா சுமார் 90 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கி சாதனை புரிந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமை தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் மின்னணு அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் இப்போது நாடு முழுவதும் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை இணைக்க உதவும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் இப்போது டிஜிட்டல் ஹெல்த் எண்ணை பெறுவார்கள். ஒவ்வொரு குடிமகனின் சுகாதார பதிவும் இப்போது டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக இருக்கும்.

கடந்த 7 ஆண்டுகளில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் புதிய கட்டத்திற்குள் நாடு நுழைகிறது. இது சாதாரணமானது அல்ல. இந்தியாவின் சுகாதார வசதிகளில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் விரிவுபடுத்தப்பட்டு வலுவான தொழில்நுட்பத் தளத்தால் வழங்கப்படுகிறது.
நாட்டின் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இலவச கரோனா தடுப்பூசி இயக்கத்தின் மூலம், இந்தியா சுமார் 90 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு கோவின் தளமும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பெரும் பங்கு வகிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x