Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM

செல்லப்பிராணி இறந்ததால் சோகம்: ஒடிசா மாநிலத்தில் 500 பேருக்கு விருந்து வைத்த கடைக்காரர்கள்

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் பத்ரக் பகுதியில் சம்பி என்ற பெண் நாய் அப்பகுதியிலுள்ள கடைக்காரர்களின் செல்லப்பிராணியாக உலா வந்தது.

இங்குள்ள கடைகள் பெரும்பாலும் துரித வகை உணவகங்களாகும். இதில்சுஷாந்த் பிஸ்வால் என்ற கடை உரிமையாளரிடம் சம்பி நாய் 13 வருடங்களுக்கு முன்பு குட்டியாக வந்து சேர்ந்தது. அப்போது முதல் பிஸ்வால், நாயை வளர்த்து வந்தார். தன்னுடைய மகள் என்றே நாயை அவர் அன்போடு பராமரித்து வந்தார். பிஸ்வால் வீட்டில் வளர்ந்தாலும் பத்ரக் டவுன் முழுவதும் உள்ள கடைக்காரர்களின் அன்புக்கு பாத்திரமாக இருந்தது சம்பி.

இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி இந்த நாய் திடீரென இறந்துவிட்டது. இதனால் நாயின் பிரிவை தாங்க முடியாமல் கடைக்காரர்கள் சோகத்துடன் இருந்தனர். இந்நிலையில் நாய் இறந்த 11-வது நாளில் பத்ரக் பகுதியில் உள்ள 500 பேரை அழைத்து உணவு பரிமாறியுள்ளனர்.

இதுகுறித்து நாயின் உரிமையாளர் சுஷாந்த் பிஸ்வால் கூறும்போது, “13 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடமிருந்து குட்டியாக இந்த நாயை வாங்கினேன். என்னுடைய மகளாக நினைத்து சம்பியை வளர்த்து வந்தேன். இந்தப் பகுதியிலுள்ள நாய்களை விட இது வித்தியாசமாகவும், பாசமாகவும் இருந்தது. மற்ற தெரு நாய்களுடன் இது சேரவே சேராது. இரவு நேரங்களில் எனது கடையின் உள்ளே படுத்து தூங்கும். என்னுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தது. இதன் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை.

நாய் இறந்த 11-ம் நாளில் இப்பகுதியில் உள்ள 500 பேரை அழைத்து நாயின் நினைவாக உணவு பரிமாறினோம். கடையின் முன்பு நாயின் புகைப்படத்தை பேனராக வைத்துள்ளோம். இதற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x