Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு- உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி பின்பற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்தஉத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்று கூறி, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம்பிறப்பித்த உத்தரவில், ‘‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது.

எனவே, மருத்துவப் படிப்பின்அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கத்தக்கது. அதேநேரம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்துக்கும் அதிகமாகஇருப்பதால், உச்ச நீதிமன்ற அனுமதியின்றி அந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது’’ என்று தெரிவித்தது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘‘திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கும், உயர் நீதிமன்றம் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்துள்ள தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் கூற முடியாது. இதில் உயர்நீதிமன்றம் தனது வரம்பை மீறிசெயல்பட்டுள்ளது’’ என்று வாதிட் டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி பின்பற்ற முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்த நீதிமன்றத்தின் முன்பு என்ன கோரிக்கை வைக்கப்பட்டதோ, அதற்கு முரணாக உள்ளது. எனவே,இது தொடர்பாக உயர் நீதிமன்றம்பிறப்பித்துள்ள தீர்ப்பின் ஒருபகுதியை மட்டும் ரத்து செய்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசு கடந்த ஜூலை 29-ல்பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்.7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x