Last Updated : 24 Sep, 2021 06:26 PM

 

Published : 24 Sep 2021 06:26 PM
Last Updated : 24 Sep 2021 06:26 PM

கர்நாடகாவில் தலித்துகளுக்கு அனுமதி மறுத்த உணவகத்துக்கு சீல்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சித்தரிப்புப் படம்.

பெங்களூரு

கர்நாடகாவில் ஹாசன் மாவட்டம் அருகே தலித் மக்களுக்கு உணவருந்த அனுமதி மறுத்த உணவகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்ன‌ராயபட்டணா அருகே தின்டகூரு என்ற கிராமம் உள்ளது. அங்கு மாதே கவுடா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகம் நட‌த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (26) தனது நண்பர்களுடன் உணவகத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது உணவகத்தின் உரிமையாளர் மாதே கவுடா, 'தலித் மக்களுக்கு உணவகத்தின் உள்ளே அமர்ந்து உணவு அருந்த‌ அனுமதி இல்லை. வெளியே நின்று உணவை பார்சல் வாங்கிக்கொண்டு போகலாம்' எனக் கூறியுள்ளார். இதனால் சந்தோஷூக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாதே கவுடா சந்தோஷை தாக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து சந்தோஷ் சென்னராயப்பட்டணா வட்டாட்சியர், ஹாசன் மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் மாதேகவுடாவின் உணவகத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக புகார் அளித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த 21 ஆம் தேதி ஹாசன் மாவட்ட பீம் ஆர்மி அமைப்பின் செயலாளர் நடராஜ் தலைமையில் தின்டகூருவில் கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் உணவகத்தை மூடக்கோரியும், அதே கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தலித் மக்களை உள்ளே அனுமதிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பப்பட்டது.

பீம் ஆர்மி அமைப்பின் தொடர் அழுத்தத்தின்பேரில் சென்னராயப்பட்டணா வட்டாட்சியர் ஜே.பி.மாருதி, சமூக நலத்துறை அதிகாரிகள் தின்டகூரு கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உணவகத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் ஜே.பி.மாருதி, உணவகத்தை மூடுவதற்கான நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார். மேலும் இதுகுறித்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழ‌க்குப்பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

வட்டாட்சியர் ஜே.பி.மாருதி கூறும்போது, ' இந்திய அரசிய‌லமைப்பு சட்டத்தின்படி தீண்டாமை கடைபிடிப்பது குற்றமாகும். உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரின் உணவகத்தின்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கவில்லை என இங்குள்ள பிற சாதியினர் கூறினர். எனவே போலீஸார் முன்னிலையில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த விரைவில் தேதி குறிக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x