அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி: 24-ம் தேதி ஜோ பைடனுடன் ஆலோசனை

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி: 24-ம் தேதி ஜோ பைடனுடன் ஆலோசனை

Published on

குவாட் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம் அவர்களது சந்திப்பில் முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது.

முதல்முறையாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மார்ச் மாதம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி குவாட் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

குவாட் மாநாட்டில் கரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். முக்கியமான ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முக்கிய விவாதம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலிபான்கள் ஆப்கனை கைபற்றிய பிறகு அங்கு ஏற்பட்டுள்ள நிலவரம், அதனால் சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் வாஷிங்டனில் 24-ம் தேதி நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.

அந்த மாநாட்டில் குவாட் தடுப்பூசி திட்டத்தை மதிப்பாய்வு செய்வார்கள். முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், உள் கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம், கல்வி போன்ற உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும், தலைவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறி கொள்வர். பிரதமர் மோடி 25-ம் தேதி ஐ.நா.பொதுசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in