Published : 21 Sep 2021 04:49 AM
Last Updated : 21 Sep 2021 04:49 AM

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர் நீ்திமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011-13 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து குவித்துள்ள
தாகவும், எனவே அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நீதிபதி ஆர்.ஹேமலதா, காலம் கடந்து வழக்குப்பதிவு செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் மாறுபட்டு தீர்ப்பளித்தனர்.

இதனால் இந்த வழக்கை 3-வதுநீதிபதியாக எம்.நிர்மல்குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ், நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த்தவே ஆஜராகி, ‘‘உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த வழக்கை 3-வதாக தனி நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 நீதிபதிகள் முழுமையாக விசாரித்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரித்து வருகிறார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், ‘‘இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர் என்பதால்தான் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு காலதாமதமாக விசாரிக்கப்படவில்லை. இந்த விசாரணைக்கு உரிய முகாந்திரம் உள்ளது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்
எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என இடைக்காலத்தடைவிதித்தனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதில்
அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x