Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

ஆப்கனில் முதலீடு செய்வது குறித்து பிரதமர் முடிவு செய்வார்: கட்கரி தகவல்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் அங்கு முதலீடுகள் மேற்கொள்வது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் ஆப்கானிஸ்தானில் இந்தியா பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை ஏற்கெனவே நிறைவு செய்துள்ளது. மேலும் பல திட்டங்கள் நிறைவடையாமல் உள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அரசியல் சூழல் மாறியுள்ளது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, முன்பு நட்பு நாடாக இருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணை கட்டுமானம், சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதால் புதிய அரசுடனான உறவு குறித்து வெளியுறவு துறை தீர்மானிக்க வேண்டும். அதனடிப்படையில்தான் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொள்வது குறித்தும் முடிவுகள் எட்டப்படும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறுகையில் ஆப்கானிஸ்தானின் புதிய அரசியல் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகம் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x