Published : 19 Sep 2021 03:40 PM
Last Updated : 19 Sep 2021 03:40 PM

பஞ்சாப் முதல்வராக சுக்ஜிந்தர் சிங் தேர்வு?- விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவின் பெயரை அடுத்த முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு உள்ளது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

எனினும், முதல்வர் அமரீந்தரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருதரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அதன்பின், மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.

இந்நிலையில் முதல்வர் அமரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் புதிய முதல்வர் சீக்கியராக இருக்க வேண்டும் என்று கூறி தனக்கு அளித்த வாய்ப்பை அம்பிகா சோனி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இந்தநிலையில் பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவின் பெயரை அடுத்த முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சுக்ஜிந்தர் ரந்தாவா பஞ்சாப் மாநில சிறைத்துறை அமைச்சராக உள்ளார். இதுகுறித்து சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா கூறுகையில் ‘‘எந்தப் பதவிக்கும் நான் ஒருபோதும் முயலவில்லை. கட்சியும், மாநில மக்களும் அவருக்கு ஆதரவாக இருக்கும் வரை மட்டுமே ஒருவர் முதல்வராக இருக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x