Published : 16 Feb 2016 09:22 AM
Last Updated : 16 Feb 2016 09:22 AM

ராணுவத்தில் முன்னுரிமை: பதவி உயர்வு கொள்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

ராணுவத்தில் முன்னுரிமை பதவி உயர்வு கொள்கையை உச்ச நீதிமன்றம் ஆதரித்துள்ளது.

ராணுவத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கொள்கையை மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டனர். இந்நிலையில், ராணுவ பதவி உயர்வு கொள்கையை எதிர்த்து லெப்டினன்ட் கர்னல் பி.கே.சவுத்ரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் கூறுகையில், ‘‘தரைப்படை, பீரங்கி படை பிரிவைச் சேர்ந்த வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த கொள்கையால், கவச பிரிவு, இயந்திரமய தரைப்படை, சிக்னல் பிரிவு மற்றும் ராணுவ தளவாட பிரிவுகளில் உள்ள வீரர்கள், குறிப்பாக கர்னல் மற்றும் அவர்களுக்கு மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவது கடினமாக உள்ளது. இது பாரபட்சமானது. எனவே, மத்திய அரசின் கொள்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

முன்னதாக இந்த பதவி உயர்வு கொள்கையை ஆயுதப் படை தீர்ப்பாயம் ரத்து செய்திருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னுரிமை ராணுவ பதவி உயர்வு கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும்,ராணுவ பதவி உயர்வு கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 141 கூடுதல் பணியிடங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், தற்போதுள்ள முன்னுரிமை ராணுவ பதவி உயர்வு கொள்கை நீடிக்கிறதா இல்லையா என்பது, முழு உத்தரவும் உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் வெளியான பிறகுதான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x