Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

அரைக்கால் சட்டை அணிந்து வந்த மாணவிக்கு தடை: ஜன்னல் திரைச்சீலை அணிந்து நுழைவுத் தேர்வு எழுதினார்

அசாம் மாநிலத்தில் அரைக்கால் சட்டை அணிந்த மாணவி நுழைவுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. அந்த மாணவி ஜன்னல் திரைச்சீலையை அணிந்து நுழைவுத் தேர்வை எழுதினார்.

அசாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டம், சாரியாலி பகுதியை சேர்ந்த மாணவி ஜூபிலி தமுலி (19). கடந்த 15-ம் தேதி அவர் ஜோர்காட் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுத 70 கி.மீ. தொலைவில் உள்ள தேஸ்பூர் நகருக்கு சென்றார். அங்குள்ள கல்லூரியில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

மாணவி ஜூபிலி அரைக்கால் சட்டை அணிந்திருந்தார். அவரது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தன. ஆனால் அரைக்கால் சட்டை அணிந்திருப்பதால், ஆடைக் கட்டுப்பாடு காரணமாக நுழைவுத் தேர்வு எழுத அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தேர்வு மையத்துக்கு அருகில் துணிக்கடை எதுவும் இல்லை. சுமார் 8 கி.மீ. தொலைவு சென்றால் மட்டுமே புதிய துணி வாங்க முடியும். வேறு வழியின்றி தேர்வு மைய அறையின் திரைச்சீலையை மாணவி ஜூபிலி இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்தார். அதன்பிறகே அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மாணவி ஜூபிலி நிருபர்களிடம் கூறியதாவது:

அண்மையில் அரைக்கால் சட்டை அணிந்து நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன் அதற்கு யாரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல அரைக்கால் சட்டை அணிந்து வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டது.

முழுக்கால் சட்டை அணிந்து வந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் கண்டிப்புடன் கூறினார். எனது தந்தை புதிய ஆடை வாங்க அலைந்து திரிந்தார். அருகில் எந்த துணிக்கடையும் இல்லாததால் புதிய ஆடை வாங்க முடியவில்லை.

இறுதியில் ஜன்னல் திரைச்சீலையை சுற்றிக் கொண்டு தேர்வு எழுதினேன். இது எனது வாழ்வில் ஏற்பட்ட மிகவும் அவமானகரமான நிகழ்வாகும். ஆடைக் கட்டுப்பாடு குறித்து எவ்வித வழிகாட்டு நெறிகளும் வழங்கப்படாத நிலையில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. மனஉளைச்சலோடு நுழைவுத் தேர்வை எழுதியுள்ளேன்.

ஒரு மாணவர் கால் சட்டை அணிந்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அதேநேரம் மாணவி கால் சட்டை அணிந்தால் விமர்சனங்கள் குவிகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "நுழைவுத் தேர்வு எழுத மட்டுமே கல்லூரிவளாகத்தில் இடம் கொடுத்தோம். நுழைவுத் தேர்வுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x