Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

ஓலா மின்சார ஸ்கூட்டர்; 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை: நவம்பரில் மீண்டும் முன்பதிவு தொடங்கும்

புதுடெல்லி

ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் கடந்த 2 நாட்களில் ரூ.1,100கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத் தலைவர்பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது பலர்மின்சார வாகனங்களுக்கு மாறிவருகின்றனர். குறிப்பாக மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புகிடைத்து வருகிறது. ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோஎன்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ஸ்கூட்டர்களின் விற்பனை, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்-1 மாடல் விலை ரூ.99 ஆயிரம், எஸ்-1 புரோ மாடல் விலை ரூ.1.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவிநாடிக்கு நான்கு ஓலா ஸ்கூட்டர்கள் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களில் ரூ.1.100 கோடிக்கு ஓலாமின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது தொடர்பாக ஓலா நிறுவனத் தலைவர் பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஓலா ஸ்கூட்டர்கள் 2 நாட்களில் ரூ.1,100 கோடி அளவுக்கு விற்பனையாகியுள்ளன. அடுத்தகட்ட முன்பதிவு நவ.1-ம்தேதி தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ரூ.20 ஆயிரம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து டெலிவரி தொடங்கும் என்று நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி வருண் துபே தெரிவித்துள்ளார். எந்த தேதியில் வாடிக்கையாளர் பதிவு செய்தாரோ, அந்த பதிவு அடிப்படையில் அவர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x