Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

விலை உயர்ந்த மருந்து பொருட்களுக்கு வரி விலக்கு; ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் இல்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

லக்னோவில் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

லக்னோ

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு ஏற்ற தருணம் இதுவல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் விலை உயர்ந்த சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 45-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நேற்று நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொலி காட்சியில் மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கரோனா தொற்றுகுறைந்துள்ள நிலையில், நேற்றைய கூட்டத்தில் கவுன்சில் உறுப்பினர்களான மாநில நிதிஅமைச்சர்கள் நேரடியாக பங்கேற்றனர்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இது உகந்தநேரம் அல்ல. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் தற்போதைக்கு அந்த முடிவு கைவிடப்படுகிறது. பயோ டீசல் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2 குழுக்கள் அமைப்பு

இ-வே பில், பாஸ்டாக் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், வரிகளை சீரமைப்பது குறித்து பரிந்துரைக்கவும் மத்திய அமைச்சர்களை கொண்ட 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வரி சீரமைப்பு குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லாத விலை உயர்ந்தமருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜோல்ங்ஜெல்ஸ்மா மற்றும் விடெப்ஸோ ஆகிய மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு சலுகை நீட்டிப்பு

அதேபோல அம்போடெரிசின் பி, டொசிலிஸுமாப் உள்ளிட்ட கரோனா மருந்துகளுக்கான வரி விலக்கு சலுகை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அளிக்கப்படும்.

சில மருந்துகள் மீதான வரி12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தசலுகை டிசம்பர் 31 வரை அளிக்கப்படும். அந்த வகையில் இடோலிஸுமாப், போஸாகோனஸோல், இன்பிளிக்ஸிமமாப், பாம்லனிவிமாப், எட்சிவிமாப், கஸிரிவிமாப், இம்டெவிமாப், 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ், பாவிபிரியாவிர் ஆகிய மருந்துகளுக்கு வரி குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கெனவே மருந்துப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி குறைப்பு மற்றும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ உபகரணங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளது.

மரபுசாரா மின்னுற்பத்தி கருவிகள் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேனா மற்றும் உதிரி பாகங்கள் மீதானவரி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி 75சதவீத அளவுக்கு செயல்படுத்தப்படும் பயிற்சி திட்டங்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும்.

சரக்குகளை ஏற்றிச் செல்லும் தேசிய பர்மிட் வாகனங்கள் மீது மாநில அரசு விதிக்கும் ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானம் மூலம்ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வு

அதேநேரத்தில் சில பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இரும்பு, மாங்கனீஸ், தாமிரம், நிக்கல், கோபால்ட், அலுமினியம், ஈயம், துத்தநாகம், குரோமியம் உள்ளிட்ட தாது மற்றும் அவற்றின் அடர்வுகள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் இன்ஜின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை மீதான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சொமாட்டோ, ஸ்விக்கி

செல்போன் செயலி மூலம் உணவு விநியோக நிறுவனங்களாக செயல்படும் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை. ஆனால் டெலிவரி செய்யும் உணவுப் பொருள் மீதான ஜிஎஸ்டி-யை அவை நேரடியாக செலுத்த வேண்டும். உணவகத்தில் இருந்து வசூலாகும் ஜிஎஸ்டி தொகையில் ஏற்படும் சில முறைகேடுகளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x