Published : 16 Sep 2021 08:09 AM
Last Updated : 16 Sep 2021 08:09 AM

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 % குறைந்தது: என்சிஆர்பி தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


கரோனா வைரஸ், லாக்டவுன் கட்டுப்பாடுகளால் தலைநகர் டெல்லியில் 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

ஆனாலும் 2020ம் ஆண்டில் அதிகமான பலாத்கார வழக்குகள் பதிவான நகரங்களைப் பட்டியலிட்டால் டெல்லிதான் முதலிடத்தில் இருக்கிறது. 2020ம் ஆண்டில் டெல்லியில் 997 பலாத்கார வழக்குகளும், 2-வதாக ஜெய்பூரில் 409 வழக்குகளும், மும்பையில் 322 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

2019ம் ஆண்டில் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13 ஆயிரத்து 395 வழக்குகள் பதிவான நிலையில் 2020ம் ஆண்டில் 24.65 சதவீதம்குறைந்து 10ஆயிரத்து 93 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டில் பெண்கள்மீது தாக்குதல் நடத்தியதாக 1,840 வழக்குகளும், அவர்களின் தவறாக நடத்தியது, கடத்தல் உள்ளிட்டவற்றில் 2,938 வழக்குகளும், பலாத்கார முயற்சிக்கு 9 வழக்குகளும், ஒரு பலாத்கார கொலை வழக்கும், கூட்டுப்பலாத்கார வழக்கும் பதிவாகியுள்ளது.

கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மூலம் கொடுமைப்படுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு மட்டும் 2,557 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களை ஒழுக்கக் கேடாக சித்தரித்தல், நடத்துதல் போன்றவற்றில் 416 வழக்குகளும், வரதட்சணைக் கொடுமை குற்றச்சாட்டில் 110 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெண்கள் முகத்தில் ஆசிட்வீசியதாக 2 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆட்கடத்தல் வழக்கில் 204 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த கடத்தலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுைகயில் “ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்களை மட்டுமே என்சிஆர்பி வழங்குகிறது.

ஆனால், லாக்டவுன் காரணமாக குற்றங்கள் குறைந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது, லாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள், வீட்டுக்குள் நடந்த கொடுமைகள் குறித்து அவர்களால் போலீஸாரிடம் புகார் அளிக்க இயலவில்லை. சமீபத்தில் டெல்லியில்நடந்த பலாத்காரங்கள் அனைத்தும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x