வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு 6 அமைப்புகளுக்கு அனுமதி நிறுத்திவைப்பு

வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு 6 அமைப்புகளுக்கு அனுமதி நிறுத்திவைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு, 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் உரிமம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மதமாற்றம் அல்லது நிதி முறைகேட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கிறிஸ்தவ நற்செய்தி குழுக்கள், இஸ்லாமிய அறக்கட்டளைகள் உள்ளிட்ட 6 அமைப்புகளுக்கான எப்சிஆர்ஏ உரிமம் 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்சிஆர்ஏ விதிமீறலை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஒன்றரை மாதங்களில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு எப்சிஆர்ஏ உரிமம் நிறுத்திவைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் சன்னி முஸ்லிம் தலைவர் ஷேக் அபூபக்கர் அகமதுவுடன் தொடர்புடைய ஒரு பெரிய அரசு சாரா அமைப்புக்கு வழங்கப்பட்ட எப்சிஆர்ஏ உரிமம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. நிதிமுறைகேடு, உண்மைகளை தவறாக சித்தரித்தல், வருடாந்திர எப்சிஆர்ஏ ரிட்டன் தாக்கல் செய்யாதது ஆகியவற்றுக்காக இதன் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது.

லக்னோவை சேர்ந்த அல் ஹசன் கல்வி மற்றும் நல்வாழ்வு அமைப்பின் எப்சிஆர்ஏ உரிமம் கடந்த ஜூலை இறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டாய மதமாற்ற செயல்பாடுகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ரஸ் பவுன்டேஷன், ஹரியாணாவை சேர்ந்த மேவாத் கல்வி நல அறக்கட்டளை உள்ளிட்ட 4 அமைப்புகளின் எப்சிஆர்ஏ உரிமம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in