Published : 23 Feb 2016 09:20 AM
Last Updated : 23 Feb 2016 09:20 AM

விவாகரத்து பெற்று, நண்பரை மணக்க இருப்பதாக கணவனுக்கு மனைவி கடிதம் எழுதுவது கொடூரம்: விவாகரத்தை உறுதி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

‘விவாகரத்து பெற்று பழைய நண்பரை மணக்க போகிறேன்’ என்று கணவனுக்கு மனைவி எழுதிய கடிதம் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது.

டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 1980-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின், கடந்த 1987-ம் ஆண்டு கணவன் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் அமெரிக்கா சென்ற 3 ஆண்டுகளுக்கு பிறகு 1990-ம் ஆண்டு கணவனுக்கு மனைவி ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், ‘‘நாம் விவாகரத்து பெற்றுக் கொள்வோம். ஏனெனில், என்னுடைய பழைய நண்பர் (கடிதத்தில் அவரது பெயரை குறிப் பிட்டுள்ளார்.) என்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக் கிறார். நமது மகளையும் அவர் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்’’ என்று அந்த பெண் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தை படித்த கணவன் அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் திடீர் மாற்றம் குறித்து மனமுடைந்து தினம் தினம் வேதனை அடைந்துள்ளார். இதை யடுத்து, கடந்த 1995-ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் கணவன் சார்பில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதி மன்றம் கணவனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கை நீதிபதி நஜ்மி வஸிரி விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜரான மனைவி, ‘‘நான் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அப்படி கடிதம் எழுதினேன். அவருக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று அப்படி செய் தேன். கடிதத்தில் நான் கூறிய விஷயங்கள் எதுவும் உண்மை யில்லை. தவிரவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது போல் பழைய நண்பர் என்று எனக்கு யாரும் கிடையாது. அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வர வேண்டும். அவருடன் வாழ வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன்’’ என்று கூறினார்.

ஆனால், கணவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஞ்ஜித் சிங் அலுவாலியா வாதிடுகையில், ‘‘கணவனுக்கு கடந்த 1990-ம் ஆண்டு மனைவி கடிதம் எழுதி யிருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து 1995-ம் ஆண்டுதான் விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அந்த 5 ஆண்டுகளில் கணவனை சமாதானப்படுத்த மனைவி ஒரு முறை கூட முயற்சிக்க வில்லை. கடிதம் எழுதியதற்கான காரணம் குறித்து அவரிடம் விளக்கவும் முயற்சிக்கவில்லை’’ என்று கூறினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வஸிரி, ‘‘மனைவி எழுதிய ஒரு கடிதம் கணவனின் மனநிலையை பாதிக்கும் அளவுக்கு உள்ளது. 5 ஆண்டுகள் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். கடந்த 1987-ம் ஆண்டில் இருந்து மனைவியை பிரிந்து வெளிநாட்டில் கணவன் வசித்துள்ளார். அந்தச் சூழ்நிலையில் தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக மனைவி கடிதம் எழுதுவது கொடூரமானது. அந்த கடிதம் கணவனுக்கு எவ்வளவு வலியை தந்திருக்கும். திருமண பந்தத்தையே சிதைக்கும் வகையில் கடிதம் எழுதியது கணவனை துன்புறுத்துவது போலாகும். எனவே, திருமணம் செல்லாது என்று விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்’’ என்று உத்தரவிட்டார்.

28 ஆண்டுகள் மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவனுக்கு விவாகரத்தை உறுதி செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x