

சியாச்சின் பனிச்சரிவில் பலி யான 9 வீரர்களின் உடல்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அடிவார முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டன.
இமயமலையின் சியாச்சின் சிகரத்தில் முகாமிட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் கடந்த 3-ம் தேதி நேரிட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். 6 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந் தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் ஹூப்ளி அருகே பெடதூரில் நேற்றுமுன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக இதர 9 வீரர்களின் உடல்கள் சியாச்சின் சிகரத்தில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று வானிலை தெளிவாக இருந்ததால் 9 பேரின் உடல்களும் ஹெலிகாப்டர் மூலம் அடிவார முகாமுக்கு கொண்டு வரப்பட்டன.
இன்று வானிலை சாதகமாக இருந்தால் லே விமான தளத்தில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
பலியான 10 வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழுமலை, குமார், கணேசன், ராமமூர்த்தி ஆகியோரும் அடங்குவர்.