Published : 13 Sep 2021 03:49 PM
Last Updated : 13 Sep 2021 03:49 PM

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு

காந்திநகர்

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2016 முதல் அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் ருபானி மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பாஜக எம்எல் ஏக்களின் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத்தை சந்தித்த பூபேந்திர படேல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதலவர் சிவராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் சாவந்த், ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 1962 ஜூலை 15-ம் தேதி பிறந்த பூபேந்திர படேல், கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தின் காட்லோடியா தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு 1.17 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் படேலுக்கு 57,902 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

குஜராத் முன்னாள் முதல்வரும் உத்தர பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் படேலின் தீவிர ஆதரவாளரான பூபேந்திர படேல் ஆர்எஸ்எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x