Published : 13 Sep 2021 09:20 AM
Last Updated : 13 Sep 2021 09:20 AM

மம்தா அரசு கட்டிய கொல்கத்தா பாலத்தின் புகைப்படங்களை தங்கள் மாநில விளம்பரத்துக்கு பயன்படுத்திய உ.பி. அரசு: திரிணமூல் காங்கிரஸ் சாடல்


மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைைமயிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு கொல்கத்தாவில் கட்டிய மேம்பாலத்தின் புகைப்படங்களை தங்கள் மாநில அரசின் விளம்பரத்துக்கு உத்தரப்பிரதேச ஆளும் பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது.

ஆங்கில நாளட்டின் விளம்பரம் செய்வதற்காக கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம் பாலத்தின் புகைப்படங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு பயன்படுத்தியுள்ளதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகச் சாடியுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள மா மேம்பாலம் நகரின் மத்தியப் பகுதியையும், சால்ட் லேக் , ராஜர்ஹட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் அடையாளங்களாகக் கூறப்படும் மஞ்சள் டாக்ஸி, 5நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றுக்கு அடுத்தார்போல் இந்த மா மேம்பாலமும் அமைந்துள்ளது.

ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை(நேற்று) ஆங்கில நாளேடு ஒன்றில் இந்த மா மேம்பாலத்தின் படத்தை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களாக சித்தரித்து வெளியிட்டது சர்ச்சைக்குரியதாகயுள்ளது.

மே.வங்க அரசின் நகரமேம்பாட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம் கூறுகையில் “ முதல்வர் மம்தாவின் ஆட்சியி்ல கொல்கத்தாவின் பெருமையாக விளங்கக்கூடிய மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசு தங்கள் மாநில அரசின் விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளது.

மே.வங்க அரசு மீது மக்களிடம் தவறான எண்ணங்களைப் பரப்ப உ.பி.யில் சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்த புகைப்படங்களையும் பாஜக கடந்த காலங்களில் பயன்படுத்தியது. இப்போது மே.வங்க அரசின் கீழ் கட்டப்பட்ட பாலங்களை தங்கள் மாநில அரசின் கீழ் கட்டப்பட்டதாகக் கூறி உ.பி. அரசு விளம்பரம் செய்கிறது” எனத் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உத்தரப்பிரதேசத்தை மாற்றுகிறேன் என யோகி ஆதித்யாத் கூறுவதெல்லாம், மே.வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் கட்டப்பட்ட பாலங்களை, கட்டமைப்பு வசதிகளின் புகைப்படங்களை திருடி பயன்படுத்தி, தாங்கள் கட்டியதாக காண்பிப்பதுதானா. பாஜகவின் வலுவான மாநிலத்தில் இரட்டை எஞ்சின் மாடல் அரசு தோல்வி அடைந்துவிட்டது, அவர்களின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது” என விமர்சித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி, மக்களவை எம்.பி. மவுஹா மொய்த்ரா ஆகிய இருவரும் சமூக வலைத்தளத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் உத்தரப்பிரதேச அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த நாளேட்டின் ஆன்-லைனில் இந்தப் பாலத்தின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. அந்த நாளேடு அளி்த்த விளக்கத்தில் “ உத்தரப்பிரதேச அரசின் விளம்பரத்துக்காக எங்களின் விளம்பரத்துறை தவறான புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவி்க்கிறோம். அனைத்து டிஜிட்டல் பதிப்பிலும் இந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x