Last Updated : 12 Sep, 2021 01:11 PM

 

Published : 12 Sep 2021 01:11 PM
Last Updated : 12 Sep 2021 01:11 PM

பவானிபூர் தேர்தல்: மம்தாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் பிரியங்கா நாளை மனுத் தாக்கல்

மே.வங்கத்தில் பவானிபூர் இடைத் தேர்தலில் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ்கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர் பிரியங்கா தெப்ரிவால் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு

வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும்,வேளாண்அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ்கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பி்ல் பிரியங்கா தெப்ரிவால் களமிறக்கப்பட்டுள்ளார், அவர் நாளை முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

அதற்கு முன்னதாக இன்று, பாஜக சார்பில் பவானிபூரில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சுவர்களில் பாஜக சின்னத்தை வரைந்தும், பாஜக கொடிகளை வைத்தும் பிரச்சாரத்தை மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தொடங்கி வைத்தார்.

பாஜக வேட்பாளர் பிரியங்கா தெப்ரிவால் இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்த மாநில மக்கள் வாழ்வதற்கு உரிமை பெற்றுள்ளார்கள், ஆனால், முதல்வர் மம்தாவும், அவரின் கட்சியும் உரிமைகளைப்பறிக்க முயல்கிறார்கள்.

நான் எனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறேன். வங்காள மக்களுக்காக போராடுவேன். ஆளும்கட்சி வன்முறையில் நம்பிக்கையுள்ளதால், தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படாது. நான் ஆளும் கட்சிக்காகப் போராட உள்ளேன் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான நியாயத்தையும் வழங்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ்

மே.வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறுகையில் “ நந்திகிராமில் போட்டியி்ட்ட மம்தா, தான் வெற்றிபெறுவேன் என நம்பினார். ஆனால், தோல்வி அடைந்தார். அரசியலில் யாரும் எதையும் கணிக்க முடியாது எது வேண்டுமானாலும் நடக்கும். தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரியங்கா போராடுவார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x