Published : 11 Sep 2021 04:56 PM
Last Updated : 11 Sep 2021 04:56 PM

செப்டம்பர் 11-ம் தேதி மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினம்: பிரதமர் மோடி பேச்சு

காந்திநகர்

உலக வரலாற்றில் செப்டம்பர் 11ம் தேதி, மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினமாக அறியப்படுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

இன்று தொடங்கி வைக்கப்படும் விடுதி வசதி, பல மாணவிகள் முன்னுக்கு வர உதவும். நவீன கட்டிடம், மாணவிகள் விடுதி மற்றும் நவீன நூலகம் ஆகியவை இளைஞர்களை மேம்படுத்தும். தொழில்முனைவு வளர்ச்சி மையம், குஜராத்தின் வலுவான வர்த்தக அடையாளத்தை மேம்படுத்தும் மற்றும் சிவில் சர்வீஸ் மையம், சிவில் சர்வீஸ் பணி, பாதுகாப்பு மற்றும் நீதி சேவைகளில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, புதிய வழிகாட்டுதலை அளிக்கும். நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் நிறுவனமாக மட்டும் சர்தார் தாம் மாறாமல், சர்தார் சாஹிப்பின் லட்சியங்களுடன் வாழ எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.

உலக வரலாற்றில் செப்டம்பர் 11ம் தேதி, மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினமாக அறியப்படுகிறது. ஆனால், இந்த தேதி, ஒட்டுமொத்த உலகத்துக்கும் அதிகம் கற்றுக்கொடுத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன் 1893 செப்டம்பர் 11ம் தேதி, உலக மதங்களின் மாநாடு சிகாகோவில் நடந்த போது, சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் மனிதநேய மதிப்புகளை உலக அரங்கில் அறிமுகப்படுத்தினார். இது போன்ற மனிதநேயங்கள் மூலமாக மட்டுமே, செப்டம்பர் 11 போன்ற சோகங்களுக்கு தீர்வு ஏற்படும், என உலகம் இன்று உணர்கிறது.

இன்று செப்டம்பர் 11ம் தேதி மற்றொரு பெரிய நிகழ்வும் உள்ளது. இந்தியாவின் மகாகவி, தத்துவஅறிஞர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ‘சுப்பிரமணிய பாரதி’ -யின் 100வது நினைவு தினம். சர்தார் சாஹிப் கண்ட ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தத்துவம், மகாகவி பாரதியின் தமிழ் எழுத்துக்களில் முழு தெய்வீகத்துடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சுப்பிரமணிய பாரதி சுவாமி விவேகானந்தரிடம் இருந்து ஊக்கம் பெற்றார் மற்றும் ஸ்ரீஅரபிந்தோவால் ஈர்க்கப்பட்டார். காசியில் பாரதி வாழ்ந்தபோது, தனது சிந்தனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களையும், சக்தியையும் அளித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், ‘சுப்பிரமணிய பாரதி’ பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கலைகள் புலத்தில் தமிழ்படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும். மனிதநேய ஒற்றுமை மற்றும் இந்திய ஒற்றுமையை, சுப்பிரமணிய பாரதியார் எப்போது சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். அவரது கொள்கைகள் இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பழங்காலம் முதல் இன்று வரை, கூட்டு முயற்சிகளின் இடமாக குஜராத் இருந்து வருகிறது . இங்கிருந்துதான் தண்டி யாத்திரையை காந்திஜி தொடங்கினார். இது நாட்டின் சுதந்திர போராட்டத்தின் கூட்டு முயற்சிகளின் அடையாளமாக இன்னும் உள்ளது. அதேபோல், கேதா இயக்கத்தில், சர்தார் படேல் தலைமையில், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் ஒற்றுமை ஆங்கிலேய அரசை சரணடையச் செய்தது. குஜராத் மண்ணில் உள்ள சர்தார் சாஹிப்பின் பிரம்மாண்ட ஒற்றுமை சிலை வடிவத்தில் ஊக்கம் மற்றும் சக்தி நம் முன் நிற்கிறது.

சமூகத்தில் பின்தங்கியுள்ளவர் களை, முன்னுக்கு கொண்டு வர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று ஒரு புறம், தலித்துகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களின் உரிமைகளுக்காக பணிகள் நடக்கின்றன. மற்றொரு புறம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் சமூகத்தில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

எதிர்காலத்தில் சந்தைக்கு தேவையான திறமைகளுக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கை மாணவர்களை ஆரம்பத்திலேயே தயார்படுத்தும். திறன் இந்தியா திட்டமும், நாட்டுக்கு அதிக முன்னுரிமை உள்ள திட்டம். இத்திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான இளைஞர்கள், பல திறமைகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்று தற்சார்புடையவர்களாக மாறி வருகின்றனர். தேசிய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்ப்பதோடு, தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள் காரணமாக, குஜராத்தில் இன்று, பள்ளிப்படிப்பை கைவிடுவது 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பல திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய எதிர்காலம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று குஜராத் இளைஞர்களின் திறமை, ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரம் மூலம் புதிய சூழலை பெற்று வருகிறது.

படேல் சமூகத்தினர் எங்கு சென்றாலும், தொழிலுக்கு புதிய அடையாளத்தை அவர்கள் அளிக்கின்றனர். ‘ உங்களின் திறமை, குஜராத்தில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் தற்போது அங்கீகரிக்கப்படுகிறது. படேல் சமூகத்தினருக்கு மற்றொரு சிறந்த அம்சம் உள்ளது. அவர்கள் எங்கிருந்தாலும், இந்தியாவின் நலன்தான் அவர்களுக்கு அதி முக்கியம்.

பெருந்தொற்று இந்தியாவை பாதித்தது. ஆனால் நமது மீட்பு, பாதிப்பை விட வேகமானது. மிகப் பெரிய பொருளாதார நாடுகள் எல்லாம் பாதுகாப்பு நிலையில் இருந்தபோது, இந்தியா சீர்திருத்த நிலையில் இருந்தது. உலகளாவிய விநியோக சங்கிலியில் தடை ஏற்பட்டபோது, நிலைமையை இந்தியாவுக்கு சாதகமாக மாற்ற, நாம் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டதை தொடங்கினோம்.

ஜவுளித்துறையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், சூரத் போன்ற நகரங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x