Last Updated : 06 Feb, 2016 09:08 AM

 

Published : 06 Feb 2016 09:08 AM
Last Updated : 06 Feb 2016 09:08 AM

ஆப்பிரிக்க மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக கவுன்சிலர் உட்பட 9 பேர் கைது: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பெங்களூருவில் தான்சானியா நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவத்தில், பாஜக கவுன் சிலர் உட்பட 9 பேர் கைது செய்யப் பட்டனர். மேலும் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளனர்.

பெங்களூரு சோழதேவன‌ ஹள்ளியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஆப்பிரிக்க மாணவர் ஓட்டி வந்த கார் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அம்மாணவன் உட்பட சில ஆப் பிரிக்கர்களை அடித்து விரட்டிய உள்ளூர் கும்பல், காரை தீ வைத்துக் கொளுத்தியது. மேலும், அவ்வழி யாக வந்த தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை நிர்வாணப் படுத்தி அடித்து உதைத்தது.

அம்மாணவியின் புகாரை ஹெசரகட்டா போலீஸார் ஏற்க மறுத்தனர். பல்வேறு தரப்பிலும் எழுந்த கண்டனம், தான்சானியா தூதரக தலையீடு காரணமாக கடந்த புதன்கிழமை வழக்கு பதிவு செய் யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில அரசிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் பானுபிரகாஷ் (25), பங்காரு கணேஷ் (33), ரெஹமத்துல்லா (42), லோகேஷ் (23), மஞ்சுநாத்(27) பாஜக கவுன்சிலர் பங்காரு லோகேஷ் (37), சலீம் பாஷா(37), வெங்கடேஷ் (36), அசோக் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தூதரக அதிகாரிகள் விசாரணை

தான்சானியா தூதரக அதிகாரி ஜான் டபள்யூ.ஹெச்.கிஹாசி தலைமையிலான அதிகாரிகள் 5 பேர், மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் ஆகியோர் நேற்று பெங்களூரு வந்தனர். இக் குழுவினர் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் என்.எஸ். மேக்ரிக் ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட இக்குழு தாக்குதலுக்குள்ளான மாணவி, ஆப்பிரிக்கர்களிடம் விசாரணை நடத்தியது. பெங்களூரு அரசினர் விருந்தினர் மாளிகையில் அனைத்து ஆப்பிரிக்க மாணவர்களையும் சந்தித்து குறைகளை கேட்ட‌து.

இது தொடர்பாக தான்சானியா தூதரக அதிகாரி ஜான் டபள்யூ.ஹெச்.கிஹாசி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தான்சானியா மாணவி தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்துக்கொண்ட போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய விரும்பத்தகாத செயல்கள் இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை''என்றார்.

குற்றப்பிரிவுக்கு மாற்றம்

மாணவி தாக்கப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட் டுள்ளது. ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலை தடுக்கத் தவறிய ஹெசரகட்டா போலீஸார் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் புகாரை ஏற்காமல், இழுத்தடித்த துணை காவல் ஆய்வாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 9 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பெங்களூருவில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x