Published : 08 Sep 2021 02:59 PM
Last Updated : 08 Sep 2021 02:59 PM

சட்டப்பேரவையில்  தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கீடு; ஜார்கண்டில் பாஜக போராட்டம்

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராஞ்சியில் பாஜகவின் போராட்டம் நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

பாஜக தவிர மற்ற கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இடம் ஒதுக்கும்படி சபாநாயகர் ரபீந்தரநாத் மஹ்தோவிடம் கோரினர்.

ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சபாநாயகர் மஹ்தோ கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை கட்டிடத்தின் எண் டி.டபில்யு 348 அறையை ஒதுக்கினார். இதற்கான உத்தரவை துணை செயலாளர் நவீன்குமார் வெளியிட்டார். ஆனால், இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தங்களுக்கும் அனுமன் கோயில் கட்ட வளாகத்தில் இடம் ஒதுக்கக் கோரினர்.

பைரவ் சிங் என்பவர் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்தநிலையில் ஜார்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராஞ்சியில் அம்மாநில சட்டப்பேரவை முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x