Last Updated : 07 Sep, 2021 09:43 PM

 

Published : 07 Sep 2021 09:43 PM
Last Updated : 07 Sep 2021 09:43 PM

கோயிலுக்குச் செல்லாத சமாஜ்வாதி, பிஎஸ்பி, காங்கிரஸாருக்கு வாக்களிப்பது பாவம்: உ.பி பாஜக பிரமுகரின் சர்ச்சைப் பேச்சு

புதுடெல்லி

கோயில்களுக்கு செல்லாத சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), காங்கிரஸாருக்கு வாக்களிப்பது பாவம் என்று உத்தரப் பிரதேச பாஜகவின் மகளிர் பிரிவு தலைவர் பேசியுள்ளது சர்சை கிளம்பியுள்ளது.

உ.பி பாஜகவின் மகளிர் பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று லக்னோவில் நடைபெற்றது. இதில், அம்மாநில பாஜக தலைவரான ஸ்வதந்திரா தேவ் சிங் நிர்வாகிகள் முன் உரையாற்றினார்.

அப்போது அவர், சமாஜ்வாதி, பிஎஸ்பி மற்றும் காங்கிரஸார் கோயில்களுக்கு செல்வதில்லை எனவும் கடவுள்களை வணங்குவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதனால், அக்கட்சிகளுக்கு வாக்களிப்பதே பாவம் என்றாகி விடும் எனவும் தலைவர் தேவ் சிங் தெரிவித்தார். இவரது பேச்சு உபி அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொதுவாகத் தேர்தல் பிரச்சாரங்களில் மதரீதியான பேச்சுக்கள் இடம்பெறுவது அதன் விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படுகிறது. இச்சூழலில் பாஜக தலைவரின் கருத்து சர்ச்சையாகி விட்டது.

பாஜக ஆளும் உபியில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மதரீதியான பேச்சுக்களை பாஜகவினர் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் புகார் கிளம்பியுள்ளது.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு உ.பி.,யின் 403 தொகுதிகளில் 312 கிடைத்தன. இதில், சமாஜ்வாதி கட்சியானது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதில், ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதிக்கு வெறும் 47 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் மிகக்குறைவான எண்ணிக்கையில் ஏழு தொகுதிகள் பெற்றது.

முன்னாள் முதல்வரான மாயாவதியின் பிஎஸ்பிக்கு 19 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. தற்போது, இந்த மூன்று கட்சிகளும் எந்தவிதமான கூட்டணியும் அமைக்காத நிலையில் நான்கு முனை போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.-

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x