

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை விவசாயிகள் அமைப்பினர் நடத்தினர். இதில், பாரத் கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பாரத் கிஸான் யூனியன் (பிகேயு) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் பேசும்போது, ‘‘விவசாயிகளுக்கு எதிரான இந்த புதிய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்று நாம் நியாயமாக போராடி வருகிறோம். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.
மேலும் வரும் 27-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தையும் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். -பிடிஐ