Last Updated : 19 Feb, 2016 12:39 PM

 

Published : 19 Feb 2016 12:39 PM
Last Updated : 19 Feb 2016 12:39 PM

கண்ணய்யா குமார் ஜாமீன் மனு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கண்ணய்யா குமார், அவரது வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசும், டெல்லி போலீஸும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகக் கூறி கண்ணய்யாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணய்யாவை மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கண்ணய்யா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "கண்ணய்யா குமாரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தேசதுரோக வழக்கில் கைதாகியுள்ள ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக இல்லை.

இதுபோன்று உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் பின்னாளில் நாடு முழுவதும் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட பலரும் உச்ச நீதிமன்றத்திலேயே நேரடியாக ஜாமீன் கோர தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

அதற்காக மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தை அணுகுமாறு சொல்லவில்லை. பாட்டியாலா நீதிமன்றத்தில் கண்ணய்யா குமார் வழக்கு விசாரணைக்கு உகந்த சூழல் இல்லை என்பதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

எனவே, அவரது ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் கண்ணய்யா குமார் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

மேலும், கண்ணய்யா குமார், அவரது வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசும், டெல்லி போலீஸும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

அதேபோல், கண்ணய்யா குமார் ஜாமீன் மனுவில் சில திருத்தங்களை மேற்கொள்ள அவரது வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x