Published : 04 Sep 2021 02:52 PM
Last Updated : 04 Sep 2021 02:52 PM

மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: நெருக்கடி தரும் பாஜக?

புதுடெல்லி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ள பபானிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மம்தா பானர்ஜி உள்ள நிலையில் பாஜக கடும் போட்டியை கொடுக்கும் எனத் தெரிகிறது.

மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும் பாஜக தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 77 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா தோல்வி அடைந்தார். அவரது முன்னாள் சகாவான சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

அவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பபானிபூர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியின் சட்டப்பேரவை தொகுதியான பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிப்லி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 13, மற்றும் வேட்பாளர்கள் செப்டம்பர் 16 வரை தங்கள் பெயர்களை திரும்பப் பெற முடியும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இங்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மம்தா பானர்ஜி உள்ள நிலையில் அவரை தோற்கடிக்க பாஜக வியூகம் வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x