

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 42 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.
இதில் பெரும்பாலான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 29 ஆயிரத்து 322 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 681 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கூடுதலாக 5 ஆயிரத்து 903 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் 1.23 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 21 லட்சம் பேர் குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,385 பேர் குணமடைந்துளளனர், குணமடைந்தோர் சதவீதம் 97.43 ஆகக் குறைந்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 330 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 40 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 92 பேரும், கேரளாவில் 131 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 52 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரத்து 38 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 லட்சத்து 4 ஆயிரத்து 970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 67.72 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.