Last Updated : 04 Sep, 2021 03:13 AM

 

Published : 04 Sep 2021 03:13 AM
Last Updated : 04 Sep 2021 03:13 AM

ம.பி.யில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின் போது சாமி சிலைகள் அருகில் காலணி அணிந்து வந்த த்ரிஷா, மணிரத்னத்தை கைது செய்ய வேண்டும்: இந்து அமைப்புகள் அளித்துள்ள புகாரால் சர்ச்சை

நடிகை த்ரிஷா காலணி அணிந்து நந்தி சிலை அருகே நடந்து வந்த காட்சி. அடுத்த படம்: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இடம்பெற்ற மற்றொரு காட்சி.

புதுடெல்லி

தமிழர்களால் போற்றப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் சரித்திரநாவல் ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாகிறது. இரண்டு பாகங்களாக இதை இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்னம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளை அடுத்து இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இங்குள்ள நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோயில்களிலும் கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்கிறது. இங்கு நடிகர் கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஹரிகேஷ்வரின் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டில் ஆண்டராணி அகில்யா பாயால் அமைக்கப்பட்ட இவை இந்துக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அக்கரையில் ஒரு படகில் த்ரிஷா வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. கரையில் வந்திறங்கிய த்ரிஷா அங்கு தரையிலிருந்த ஒரு நந்திமற்றும் சிவலிங்கத்திற்கு இடையேநடந்து வரும் காட்சி இடம்பெற்றது. அப்போது அவரது காலில் அணிந்திருந்த காலணிகளால், அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக த்ரிஷாவையும், இயக்குநர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹரிகேஷ்வரின் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இதுதொடர்பாக ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

புகார் அளித்தவர்களில் ஒருவரும் இந்து வித்யா மண்டல் அமைப்பின் தலைவருமான தினேஷ் கட்டோர் ’இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘இங்குபடப்பிடிப்புக்காக வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். இதை பெறுபவர்கள் இந்துமதத்தை அவமதிப்பது தொடர்கிறது. ராணி அகில்யா பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட சிவலிங்கம் அவமதிக்கப் பட்டுள்ளது. அதில் இந்துக்களின் கடவுள் என்ற மதிப்பும் இன்றி காலணிகளுடன் வந்த நடிகை த்ரிஷா மற்றும் அதற்கு காரணமான இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நீதிமன்றம் வரை சென்று அவர்களை கைது செய்ய வைப்போம். இதுபோல், அவர்கள் மசூதி, தேவாலயங்களில் செய்ய முடியுமா?’’ என்றார்.

இதற்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த ‘தபாங் 3’படப்பிடிப்பின் போதும் சிவலிங்கத்தின் மேற்புறம் பலகைஅமைத்து அதில் காலணிகளு டன் நடந்ததாக புகார் எழுந்தது.‘யமுனா பக்லா தீவானா’ எனும்படப்பிடிப்பிலும் சர்ச்சை எழுந்தது. கடைசியான சிவலிங்கம் அவ மதிப்பு குறித்து விளக்கம் கேட்க, நடிகை த்ரிஷா தரப்பை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் தரப்பில் இருந்து யாரும் பதில் அளிக்கத் தயாராக இல்லை என்று தெரியவந்துள்ளது. நடிகை த்ரிஷா தரப்பில் விளக்கம் அளித்தால் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x