Last Updated : 03 Sep, 2021 10:58 AM

 

Published : 03 Sep 2021 10:58 AM
Last Updated : 03 Sep 2021 10:58 AM

இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: கேரளாவில்தான் பெரும்பாலான பாதிப்பு

படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான பாதிப்பு கேரளாவில்தான் ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 45 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 3 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.

இதில் பெரும்பாலான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 32 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கூடுதலாக 10 ஆயிரத்து 195 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் 1.22 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 616 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.45 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 366 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 39 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 55 பேரும், கேரளாவில் 188 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 52 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரத்து 68 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 லட்சத்து 66 ஆயிரத்து 334 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 67.09 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x