

கர்நாடக மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கடந்த 23-ம் தேதி உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கோலார் தங்க வயலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 256 மாணவிகளுக்கு நேற்றுமுன்தினம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 32 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 21 பேர் கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதேபோல பெங்களூரு ஹொரமாவ் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 34 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 பேர் கேரளாவையும், 10 பேர்மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்கள். இதேபோல ஷிமோகாவில் ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த 20 மாணவிகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.